18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்த 21 வயது பாகிஸ்தான் வீரர்.. அறிமுக போட்டியிலேயே 9 சிக்ஸர்கள்
18 ஆண்டு உலக சாதனையை சமன் செய்த 21 வயது பாகிஸ்தான் வீரர்.. அறிமுக போட்டியிலேயே 9 சிக்ஸர்கள்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளர் ரசாவுல்லா, தனது முதல் போட்டியிலேயே 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 18 ஆண்டு கால உலக சாதனையைச் சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 133 ரன்களும், இங்கிலாந்து 453 ரன்களும் எடுத்தன. 320 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சை ஆடியது. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்து 312 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து அணி தவித்த போது, 9-வது வீரராகக் களம் இறங்கினார் அறிமுக வீரர் ரசாவுல்லா. இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 63 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற நியூசிலாந்தின் டிம் சவுதியின் 18 ஆண்டு கால உலக சாதனையை ரசாவுல்லா சமன் செய்தார். கடந்த 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக சவுதி 9 சிக்ஸர்கள் அடித்திருந்தார். மேலும், 9-வது வரிசையில் களமிறங்கி அறிமுகப் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்காவின் கார்பின் போஷ் சாதனையும் இவர் சமன் செய்துள்ளார்.
சக பந்துவீச்சாளர் முகமது அப்பாஸுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரசாவுல்லா, பாகிஸ்தான் அணியை முன்னிலை பெற வைத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
தனது பேட்டிங்கிற்கு பிறகு பேசிய ரசாவுல்லா, "எனது திட்டம் விக்கெட்டை விடாமல் நின்று ரன் குவிப்பது மட்டுமே. எனது பேட்டிங் எல்லைக்குள் வந்த பந்துகளை சிக்ஸர்களாக மாற்றினேன். இந்த இன்னிங்சில் எனது 2 பேட்கள் உடைந்தன. நாட்டிற்காக விளையாடும் போது எந்தவித பயமும் எனக்கு இருக்கவில்லை, ஆட்டத்தை முழுமையாக ரசித்து விளையாடினேன்" என்று கூறினார்.