“2027 உலகக்கோப்பையில் ஆடுவது என்..”.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஸ்வர் குமார் பதில்
“2027 உலகக்கோப்பையில் ஆடுவது என்..”.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஸ்வர் குமார் பதில்
லக்னோ: இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது பற்றியும், 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்தும் தனது தற்போதைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
புவனேஸ்வர் குமார் கடைசியாக 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு ஜனவரி மாதம் தனது கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த புவனேஸ்வர் குமார், "நான் தொடர்ந்து விளையாட வேண்டும், விளையாடிக் கொண்டு இருக்கிறேன். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் இப்போது கணிக்க முடியாது. தற்போதைக்கு எனது கவனம் விளையாடுவதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும் மட்டுமே உள்ளது" என்று கூறினார்.
மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்க உள்ள உத்தரப் பிரதேச டி20 தொடரின் 4 வது சீசனில் லக்னோ ஃபால்கன்ஸ் அணியின் கேப்டனாக புவனேஸ்வர் குமார் செயல்பட உள்ளார். 24 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. லக்னோ ஏகானா மைதானத்தில் 22 போட்டிகளும், கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் எஞ்சிய 12 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த தொடரின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், "இது இந்த தொடரின் 4 வது ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் திறமை மற்றும் வசதிகள் மேம்பட்டு வருகின்றன. இதன் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது போன்ற உள்நாட்டு தொடர்கள் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் இடம்பிடிக்க ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றன" என்றார்.
தொடர்ந்து தனது கேப்டன்சி குறித்து பேசுகையில், "தற்போது தீவிரமான திட்டமிடலை விட, வீரர்கள் மைதானத்தில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடுவதற்கான சூழலை உருவாக்குவதே எனது முக்கிய நோக்கம். கேப்டனாகவும் சீனியர் வீரராகவும் எனது பொறுப்பை சிறப்பாக செய்வேன்" என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்தார்.