இலங்கை சிறையில் 90 நாளாக 12 மீனவர்கள் விடுவிக்கக்கோரி பாம்பனில் மறியல்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் 90 நாட்களாக விசாரணை கைதிகளாக உள்ள 12 மீனவர்களை விடுவிக்கக் கோரி நேற்று பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
பிப்.,20ல் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து நீர்கொழும்பு அருகே வெளிச்சூரா சிறையில் அடைத்தனர். நேற்றுடன் 90 நாட்களாக சிறையில் உள்ள மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விசாரணை கைதிகளாக இலங்கை அரசு அடைத்துள்ளது.
இதனால் மீனவர்களுக்கு சிறையில் தரமற்ற உணவு, குடிநீர் வழங்குவதால் உடல் நிலை, மனரீதியாக பாதித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரணை கைதிகளாக உள்ள 12 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பாம்பனில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மறியல் செய்தனர்.
இம்மறியல் 30 நிமிடம் நீடித்ததால் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதன் பின் ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, போலீசார் மீனவர்களை சமரசம் செய்ததால் மறியலை வாபஸ் பெற்றனர்.