📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 12, 2026 07:04 PM

அந்த கிரீடம் ஒன்னும் சும்மா கிடையாது.. சுப்மன் கில்லுக்கு எச்சரிக்கை தந்த முன்னாள் வீரர்

அந்த கிரீடம் ஒன்னும் சும்மா கிடையாது.. சுப்மன் கில்லுக்கு எச்சரிக்கை தந்த முன்னாள் வீரர்

அந்த கிரீடம் ஒன்னும் சும்மா கிடையாது.. சுப்மன் கில்லுக்கு எச்சரிக்கை தந்த முன்னாள் வீரர்

மும்பை: இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று, சுப்மன் கில் தனது கேப்டன்சிப் பயணத்தை மீண்டும் வலுவான பாதைக்கு கொண்டு வர வேண்டுமெனில், அவர் மீது கடுமையான அழுத்தம் இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கில் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அதில் 5 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் கிடைத்துள்ளன. இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-0 என்ற தொடர் தோல்வியும் அடங்கும். அந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே அவர் காயமடைந்தார். மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்விகளைச் சந்தித்துள்ளது.

மறுபுறம், கில்லின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இருந்தாலும், தசைப்பிடிப்பு முதல் கழுத்து வலி வரை பல்வேறு காயங்களால் அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். தற்போதைய நிலையில், கேப்டன் பதவிக்கு அவருக்குப் போட்டியாக மாற்று வீரர்கள் உடனடியாக இல்லாததால் உள்நாட்டில் பெரிய அழுத்தம் இல்லை என்றாலும், அவர் மீதான விமர்சனப் பார்வைகள் குறையவில்லை.

இது குறித்து பேசிய முரளி கார்த்திக், கில்லின் தொடர் காயங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். "கிரீடம் சுமப்பவர் அதற்கான சுமைகளையும் சுமந்துதான் ஆக வேண்டும்" என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, கில் இந்த விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.

"பேட்டிங் என்று வரும்போது, ஷுப்மன் கில் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் ஒரு சிறந்த உலகத்தரம் வாய்ந்த வீரர். ரன்கள் குவிப்பதற்கான வழியை அவர் நிச்சயம் கண்டறிவார். ஆனால், மிக முக்கியமான விஷயம் அவரது உடற்தகுதிதான். அவர் தொடர்ந்து சிறு காயங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார். ஒரு தொடரைத் தொடங்குகிறார், பின்னர் சில போட்டிகளைத் தவறவிடுகிறார்.

பயிற்சிப் போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. ஒரு விளையாட்டு வீரராக, உடல் 100% தகுதியுடன் இருப்பதை உணர வேண்டும். ஏதேனும் வலி இருந்தால், உங்களால் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியாது" என்று கார்த்திக் கூறினார்.

"ஒரு கேப்டனாக, உங்களது கடைசி போட்டி மற்றும் தொடரின் செயல்பாடுகளை வைத்தே நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவி என்பது முள் கிரீடம் போன்றது. ஷுப்மன் கில் என்ன செய்தாலும் அவர் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படுவார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்வாய்ப்புகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என்பதால், அவர் மீதும், இந்தத் தொடர் மீதும் அதிக அழுத்தம் உள்ளது" என்று கார்த்திக் மேலும் தெரிவித்தார்.இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்க உள்ளது.