அபிஷேக் சர்மாவை கழட்டி விட்டு அவருக்கு பதிலா 31 வயது வீரரை அணியில் எடுங்க.. ஸ்ரீகாந்த் யோசனை
அபிஷேக் சர்மாவை கழட்டி விட்டு அவருக்கு பதிலா 31 வயது வீரரை அணியில் எடுங்க.. ஸ்ரீகாந்த் யோசனை
சென்னை: ஜிம்பாப்வே டி20 தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை அணியில் இருந்து நீக்கிவிட்டு, 31 வயதான வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் முடிவடைந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் விளையாடி வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2026 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே அவர் மோசமான ஃபார்மில் உள்ளார். தான் விளையாடிய முதல் 8 டி20 இன்னிங்ஸ்களில் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளித்த போதிலும், அவரது சொதப்பல் ஆட்டம் தற்போதும் நீடித்து வருகிறது.
இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "சர்வதேச கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை பந்துவீச்சாளர்கள் எளிதாகக் கணித்துவிட்டனர். உலகக்கோப்பை முதலே அவரது ஆட்டம் சுமாராகத் தான் உள்ளது. எனவே அவருக்கு எதிராகக் கடுமையான முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சஞ்சு சாம்சனுக்கு கண்டிப்பாக மீண்டும் 100 சதவீதம் வாய்ப்பு கிடைக்கும். உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற சாம்சனுக்கு தராத வாய்ப்புகளை, தொடர்ந்து சொதப்பும் அபிஷேக் சர்மாவுக்கு மட்டும் ஏன் பிசிசிஐ இவ்வளவு தூரம் வாரி வழங்குகிறது? இது ஒரு நியாயமான கேள்வி" என்று சாடியுள்ளார்.
சமீபத்திய உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த 31 வயதான சஞ்சு சாம்சன், ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்படவில்லை.
வரும் செப்டம்பர் இறுதியில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார்.