அரசு பள்ளியில் சரக்கு பார்ட்டி: மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்த வியாபாரி கைது
அரசு பள்ளியில் சரக்கு பார்ட்டி: மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்த வியாபாரி கைது
நாகர்கோவில்: தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் மது அருந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்த காட்சிகளை பார்த்த பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா, வடசேரியில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீடியோவில் இருந்த இரு மாணவிகளிடமும் விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எஸ்.பி. ஸ்டாலின் நேரடியாக சென்று விசாரித்தார். வீடியோவில் இருந்த மாணவிகளிடம் விசாரித்து அறிவுரை வழங்கினார். அந்த மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நிமிர் குழுவினருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தது தக்கலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர் வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவது வழக்கம். அந்த வகையில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவரின் குடும்பத்துக்கு அறிமுகமானவர். நண்பர்களுக்கு பார்ட்டி என மாணவி கேட்டதால் மது வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் ஆறு மணி நேரம் விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.