அஸ்வின் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் ஆகப் போவதாக பரவும் தகவல்.. ஆனால் விதிமுறையில் இருக்கும் சிக்கல்
அஸ்வின் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் ஆகப் போவதாக பரவும் தகவல்.. ஆனால் விதிமுறையில் இருக்கும் சிக்கல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தம் முடிய உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை. பிசிசிஐ விதிமுறைகளின்படி, ரவிச்சந்திரன் அஸ்வினால் இப்போது தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கவே முடியாது.
பிசிசிஐ விதிகளின்படி, தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். அஸ்வின் கடந்த 2024 டிசம்பர் 18 அன்றுதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனால், அவர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரே, அதாவது டிசம்பர் 2029-க்குப் பிறகுதான், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார். எனவே, தற்போது அஸ்வினால் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணபிக்க முடியாது.
கடந்த 2023 ஜூலை முதல் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில் இந்திய அணி பல முக்கிய மாற்றங்களைச் சந்தித்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா, ரஹானே போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற இக்கட்டான காலகட்டங்களை அகர்கர் மிகவும் துணிச்சலான முடிவுகளுடன் திறம்பட கையாண்டார்.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் கீழ் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என பல வரலாற்று வெற்றிகளைக் குவித்து அசத்தியுள்ளது.
தற்போது இந்திய அணி 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், அகர்கர் உலகக்கோப்பை முடியும் வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார். எனவே, அஸ்வின் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்று வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே ஆகும்.