📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 29, 2026 01:04 PM

“அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்திடுக”

“அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்திடுக”

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதனை வெறும் விலை உயர்வாக பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.