சிங்கப்பூரில் மிதமான மழை; புகைமூட்டம் நிலவக்கூடும், சிங்கப்பூர் செய்திகள்
ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிட குறைந்த அளவே மழை பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் அன்றாட உச்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் சில நாள்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வீசிவரும் தென்மேற்குப் பருவக்காற்று ஆகஸ்ட் மாத இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருகில் உள்ள நாடுகளில் வறண்ட வானிலை நிலவுவதால், சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமடைந்து சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றுப்புற வாரியம் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்கு மேல் உயர்ந்து ஆரோக்கியமற்ற நிலையை எட்டினால், அன்றாட புகைமூட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.