📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 02:04 PM

என் வாழ்க்கையை மாற்றிய இன்னிங்ஸ்.. சிஎஸ்கே அணிக்காக முதலில் நான் விளையாடுவதாகவே இல்லை

என் வாழ்க்கையை மாற்றிய இன்னிங்ஸ்.. சிஎஸ்கே அணிக்காக முதலில் நான் விளையாடுவதாகவே இல்லை

என் வாழ்க்கையை மாற்றிய இன்னிங்ஸ்.. சிஎஸ்கே அணிக்காக முதலில் நான் விளையாடுவதாகவே இல்லை-ரஹானே

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐபிஎல் 2023-ல் தனக்கு ஏற்பட்ட பேட்டிங் மாற்றம் குறித்து முன்னாள் இந்திய பேட்டர் அஜிங்கியா ரஹானே மனம் திறந்துள்ளார். பல ஆண்டுகளாக 120-களில் ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்த ரஹானே, 2023-ல் சிஎஸ்கே அணியில் தனது முதல் சீசனில் ஒரு புதிய அவதாரத்தை வெளிப்படுத்தினார்.

3-வது வரிசையில் களமிறங்கிய ரஹானே, 14 போட்டிகளில் 172-க்கும் அதிகமான அசத்தலான ஸ்ட்ரைக் ரேட்டில் 326 ரன்கள் குவித்து, சிஎஸ்கே தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் அடித்த அதிரடியான 27 பந்துகளில் 61 ரன்கள் தனது வாழ்க்கையை மாற்றியதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ரஹானே, "ஐபிஎல் 2023-க்கு முன்பு, நான் இரண்டு மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன் மற்றும் எனது ஷாட்களின் வரம்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூறியது. எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் எனக்கு முழு ஆதரவை வழங்குவார்கள்."

"நான் எனது முதல் போட்டியில் விளையாடுவதாகவே இல்லை, ஆனால் ஒரு காயம் காரணமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. மும்பைக்கு எதிரான அந்த இன்னிங்ஸ் அனைத்தையும் மாற்றியது, ஆனால் அது நான் அதற்கு முன்பு செய்த தயாரிப்புகளின் அடிப்படையில் அமைந்தது."

"2019-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறிய பிறகு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் எனக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஒரு சீசனை கழித்தேன். ஒரு வீரர் சுதந்திரமாக விளையாட அவருக்கு நம்பிக்கையும் உத்தரவாதமும் தேவை. டிசி அணிக்கு முன்பு, நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடினேன்."

"மற்றவர்கள் அதிரடியாக விளையாடும்போது, இன்னிங்ஸை நிதானமாக நகர்த்துவதே எனது பணியாக இருந்தது. அதற்கேற்ப நான் விளையாடினேன்." என்று ரஹானே கூறினார். இந்திய டெஸ்ட் அணியில் அப்போது வாய்ப்பு கிடைக்காமல் நீக்கப்பட்ட நிலையில், 2023 ஐபிஎல் சீசனுக்கு பிறகு ரஹானேக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றார்.