ஹூட்டிங்கின்போதே இறந்த தாய்.. ஷூட்டிங்கை தொடர்ந்த ராதிகா... நெகிழ்ந்த சூர்யா..!
ஹூட்டிங்கின்போதே இறந்த தாய்.. ஷூட்டிங்கை தொடர்ந்த ராதிகா... நெகிழ்ந்த சூர்யா..!
நடிகை ராதிகா சரத்குமார் தனது தாயார் கீதா ராதாவின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகும், படப்பிடிப்பில் இருந்த முக்கியமான காட்சியை முடித்துவிட்டு செல்ல முடிவு செய்த சம்பவம் படக்குழுவினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரமோஷனை முன்னிட்டு நடைபெற்ற பேட்டியில், ராதிகா தொடர்பான இந்த உருக்கமான சம்பவத்தை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
படப்பிடிப்பின்போது ராதிகா இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியின் பெரும்பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்த நிலையில், ராதிகாவின் தாயார் கீதா ராதா உயிரிழந்த தகவல் படக்குழுவினருக்கு தெரியவந்தது.
தாயாரின் உடல்நிலை மோசமாக இருந்ததை முன்கூட்டியே அறிந்திருந்த ராதிகா, அவரது விருப்பத்தின் பேரிலேயே அந்த நாளில் படப்பிடிப்புக்கு வந்திருந்ததாக தெரிவித்துள்ளார். தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும், “ஷூட்டிங்கிற்குச் சென்று பணியை முடித்துவிட்டு வா” என்று அவர் கூறியதாக ராதிகா தெரிவித்துள்ளார்.
மறைவுச் செய்தி கிடைத்ததும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு உடனடியாக செல்லாமல், மீதமிருந்த சில காட்சிகளையும் முடித்துவிடலாம் என ராதிகா கூறியுள்ளார். அந்த காட்சியின் பெரும்பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்ததால், மீண்டும் அதே சூழலை உருவாக்கி படமாக்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதையும் அவர் கருத்தில் கொண்டதாக தெரிகிறது.
ராதிகாவின் இந்த முடிவு இயக்குநர் வெங்கி அட்லூரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் நகைச்சுவையான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இப்படியொரு துயரச் செய்தி வந்ததால், அடுத்ததாக என்ன செய்வது என்று தானே குழம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் ராதிகாவுடன் இணைந்து நடித்த மமிதா பைஜுவுக்கும் இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புக்கு முந்தைய நாளில் ராதிகா தனது தாயாருடனான நெருக்கம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து தன்னிடம் பேசியதாக மமிதா தெரிவித்துள்ளார். இதனால் மறுநாள் நடந்த சம்பவம் அவரை மேலும் பாதித்ததாக கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் மிகுந்த துயரத்தில் இருந்தபோதிலும், கேமரா முன் ராதிகா தனது கதாபாத்திரத்திலிருந்து விலகாமல் நடித்ததை பார்த்து தான் நெகிழ்ந்ததாகவும் மமிதா தெரிவித்துள்ளார். குறிப்பாக நகைச்சுவைக் காட்சியில் அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்தது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
ராதிகாவின் இந்த அர்ப்பணிப்பை நடிகர் சூர்யாவும் பாராட்டியுள்ளார். நடிப்பையும் தனது தொழிலையும் அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் என்றும், பல ஆண்டுகளாக சினிமாவில் அவர் நீடித்து நிற்பதற்கு இதுபோன்ற அர்ப்பணிப்பும் கலையின் மீதான மரியாதையும் முக்கிய காரணங்கள் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த கீதா ராதா, பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி ஆவார். வயது தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 86வது வயதில் சென்னையில் காலமானார். தாயாரின் மறைவுக்குப் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான தனது பாசப்பிணைப்பு குறித்து ராதிகா உருக்கமாக பகிர்ந்து வந்துள்ளார்.
தாயாரின் மறைவு செய்தியை கேட்ட நிலையிலும், அவர் விரும்பியபடி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த ராதிகாவின் செயல் தற்போது திரையுலகில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. தனிப்பட்ட துயரத்துக்கு மத்தியிலும் தொழில் மீது அவர் காட்டிய அர்ப்பணிப்பு குறித்து படக்குழுவினர் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.