📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 10, 2026 07:04 PM

இந்தியர்கள் குறித்து சங்கக்காரா சர்ச்சை கருத்து.. பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்

இந்தியர்கள் குறித்து சங்கக்காரா சர்ச்சை கருத்து.. பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்

இந்தியர்கள் குறித்து சங்கக்காரா சர்ச்சை கருத்து.. பின்னர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்- இர்பான் பதான்

மும்பை: 2005ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காராவுடன் மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பான மோதல் குறித்து இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் மனம் திறந்துள்ளார். அந்த சமயத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் இர்பான் பதானை தொடக்க வீரராக களம் இறங்குமாறு அணியின் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அப்போதைய போட்டியின் போது பந்துகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை மாற்றியதில் இலங்கை வீரர்கள் திருப்தியடையவில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் செய்யும்போது, முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் இர்பான் பதான் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதனால் ஆத்திரமடைந்த விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா, பதானை நோக்கி சில வார்த்தைகளை வீசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ' பேசிய இர்பான் பதான், "டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக களம் இறங்கி 93 ரன்கள் எடுத்தேன். முதல் இன்னிங்ஸிற்குப் பிறகு நாங்கள் பந்துவீசச் சென்றபோது, பந்துகள் இருந்த பெட்டி மாற்றப்பட்டது அல்லது அது போன்ற ஏதோ ஒன்று நடந்தது. இதனால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். அதில் சங்கக்காரா மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார்" என்று கூறினார்.

"பின்னர் நான் பேட்டிங் செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. என்னை தொடக்க வீரராக களம் இறங்க மட்டுமே சொல்லியிருந்தார்கள். நான் முரளிதரனின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களை அடித்தேன். புதிய பந்தில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் சிக்ஸர்களை எதிர்கொள்கிறார் என்றால், எதிரணியின் திட்டத்தை நீங்கள் ஓரளவு சிதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்."

"திடீரென சங்கக்காரா என்னிடன் வந்து, 'நீங்கள் ஏமாற்றுகிறீர்கள், உங்கள் பெற்றோர் உங்களுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களா' என்பது போல் தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்கினார். அவரே முதலில் வம்புக்கு இழுத்தார், நானும் அதற்குப் பதிலடி கொடுத்தேன்," என்று இர்பான் பதான் அந்த சம்பவத்தை விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்குப் பிறகு, 2008இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதலாவது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இர்பான் பதான் மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் இணைந்து விளையாடினர். டெல்லி டெஸ்ட் சம்பவத்திற்குப் பிறகு, தாங்கள் இருவரும் எப்படி ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம் என்பதை இர்பான் பதான் பகிர்ந்துள்ளார்.

"ஏலத்திற்குப் பிறகு, நான் சங்கக்காராவுடன் பஞ்சாப் அணியில் விளையாடப்போவதை அறிந்தேன். அப்போது அவரது குடும்பத்தினருடன் இணைந்து சாப்பிடும் சூழல் எனக்கு ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல், நான் அவரிடம் நேரடியாகச் சென்று அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்."

"அதன் பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் களத்தில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதை நாம் எவ்வளவு முதிர்ச்சியுடன் கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம்" என்று பதான் கூறினார். இந்த டெல்லி டெஸ்ட் போட்டியில் இர்பான் பதான் 143 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து, நூலிழையில் சதத்தைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.