இயல் விருதுக்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது தேர்வு
தமிழ் இலக்கிய உலகில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரங்களில் ஒன்று, கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’. உலக அளவில் தமிழ் மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆய்வுகளுக்கு வாழ்நாள் பங்களிப்பு அளித்த சான்றோர்களைக் கவுரவிக்கும் இந்த விருது, 2025ஆம் ஆண்டுக்காகப் பிரபல காட்சிப்பதிவாளர் மற்றும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து வடிவில் இருக்கும் இலக்கியத்தை, காட்சி வடிவத்துக்கு நகர்த்திச் சென்ற ஒரு முன்னோடிக்கு இயல் விருது வழங்கப்பட்டிருப்பது விருதின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
கோடுகளால் இயங்கும் கலைஞன்: தமிழ் இதழியல், சினிமா, அனிமேஷன் மற்றும் கலை உலகுக்கு ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தீவிரப் பங்காற்றி வருபவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. நவீன ஓவியத்தின் சாத்தியக்கூறுகளைத் தமிழ்ச் சூழலில் முதன்முதலில் காட்சிப்படுத்தியவர்களில் முக்கியமானவர்.