📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 21, 2026 06:02 PM

ஜாப்னா அருகே மிகப்பெரிய மனித புதைகுழி: ஒரே இடத்தில் 582 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

ஜாப்னா அருகே மிகப்பெரிய மனித புதைகுழி: ஒரே இடத்தில் 582 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

ஜாஃப்னாவில் உள்ள செம்மணி என்ற இடத்தில் தமிழின மக்கள் கொல்லப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இலங்கையில் 1983 மற்றும் 2009-ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவம் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. போரின் இறுதிக் காலங்களில் தமிழின மக்கள் கொத்துக் கொத்துக்காக படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழன மக்கள் இன்னும் காணப்படாதவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் ஜாஃப்னா அருகே செம்மணி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல ஆண்டுகள் காலதாமத் ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் 582 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால் பாட்டில் மற்றும் பள்ளிப் பைகள், குழந்தைகளுக்கான பொம்மை, வளையலகள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட 582 சடலங்களில் ஏதேனும் ஒன்று, இலங்கையில் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளவர்களுடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காண தடயவியல் பரிசோதனைகளும், தேவைப்பட்டால் உறவினர்களுடன் டிஎன்ஏ (DNA) ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

பல வருடத் தாமதத்திற்குப் பிறகு செம்மணி அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கியது

18 வயதுடைய தமிழ் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, இலங்கை ராணுவ வீரரான தேவாகே சோமரத்ன ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட விசாரணையின்போது, ​​1998-ல் செம்மணி பகுதி முதன்முதலில் கவனத்திற்கு வந்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார் மற்றும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது காணாமல் போன 300 முதல் 400 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு, செம்மணியில் புதைக்கப்பட்டதாக ராஜபக்ஷ விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

1999-ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 15 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 10 எலும்புக்கூடுகள் தாக்குதல் மற்றும் கொலைக்குள்ளானதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அரசு விசாரணை அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், அதன்பிறகு அந்த விசாரணை பல தசாப்தங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

பிப்ரவரி 2025-ல், இந்து மயானம் ஒன்றிற்கு அருகில் கட்டுமான பணியாளர்கள் மனித எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்ததைத் தொடர்ந்து இப்பகுதி மீண்டும் கவனத்திற்கு வந்தது. இதுவே தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணிக்குக் காரணமாக அமைந்தது.

தடயவியல் ரீதியான அகழ்வாராய்ச்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், நிதி பற்றாக்குறை காரணமாக அப்பணி நிறுத்தப்பட்டது. கூட்டுப் புதைகுழிகளை அகழ்ந்தெடுப்பதற்காக இலங்கை அரசு 21 மில்லியன் இலங்கை ரூபாயை (சுமார் 47,000 பவுண்டுகள்) ஒதுக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் தொடங்கின.

பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கூட்டமாகவும், சில இடங்களில் ஒன்றன் மீதொன்று அடுக்கப்பட்ட நிலையிலும் இருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு சம்பவத்தில், தலை இல்லாத மனித எலும்புக்கூடு ஒன்று, இரு கைகளும் மார்பின் மீது கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தடயவியல் சோதனைகள் தேவை

அந்த 582 பேரின் அடையாளம் அல்லது அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர்களை அடையாளம் காணும் செயல்முறையில் தடயவியல் பரிசோதனைகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் டிஎன்ஏ (DNA) ஒப்பீடுகள் ஆகியவை தேவைப்படலாம்.

இன சிறுபான்மையினரான தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல தசாப்த கால தாமதத்திற்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

1983 முதல் 2009 வரை நீடித்த இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, ​​பல்லாயிரக்கணக்கான மக்கள்- அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

சர்வதேச விசாரணைக்கு உறவினர்கள் கோரிக்கை

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட புதைக்குழி தொடர்பான முந்தைய விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவோ அல்லது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ தவறிவிட்டதாகக் கூறி, மனித உரிமை அமைப்புகளும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

செம்மணி விவகாரம் தொடர்பான விசாரணை சுதந்திரமானதாகவே உள்ளது என்றும், அது உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்துகிறது.

தமிழ் குடும்பங்களுக்கு உதவ அரசாங்க நிறுவனங்கள் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார நிராகரித்தார்.

"நான் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த அமைப்புகளை அவற்றின் கடந்தகால செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பிடாதீர்கள்; மாறாக, எங்கள் அரசாங்கத்தின் கீழ் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கொண்டு மதிப்பிடுங்கள்," என்று அவர் கூறினார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவரான யோகராசா கனகரன்ஜினி, உள்நாட்டு விசாரணைகளை நிராகரித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட உள்நாட்டு வழிமுறைகளையோ அல்லது விசாரணைகளையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இலங்கை அரசு எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்காது. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.