Jason Sanjay: "அதை என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் யோசிக்கக்கூட இல்லை"
Jason Sanjay: "அதை என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் யோசிக்கக்கூட இல்லை" - ஜேசன் சஞ்சய்
சமீபத்திய நேர்காணலில் ஜேசன் சஞ்சய் தன்னுடைய சினிமா கனவுக்கு தனது அப்பா விஜய் கூறியவைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் புரோமோஷனுக்காக ஐதராபாத்தில் தொகுப்பாளினி சுமாவின் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.
அவர் பேசுகையில், "சிறுவயதிலிருந்தே நான் சினிமா படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். என் நண்பர்கள் பலர் சினிமாவை வெறும் பார்வையாளர்களாகப் பொழுதுபோக்காக மட்டுமே பார்த்தார்கள்.
ஆனால், நான் அதற்குள்ளேயே வளர்ந்ததாலும், என் தந்தை இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பதைப் பார்த்து வந்ததாலும், எனக்குச் சிறுவயதிலிருந்தே சினிமா மீது இயல்பான ஈர்ப்பு இருந்தது.
ஒரு கட்டத்தில், நான் வெளிநாட்டிற்குச் சென்று திரைப்படத் தயாரிப்புப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று என் தந்தையிடம் கூறியபோது, அவர் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.
அவர் சினிமா துறையிலேயே இருப்பதால், எனக்குச் சம்மதம் தெரிவித்தார். என் அம்மா மற்றும் சகோதரியை விடவும், இந்தப் படிப்பின் முக்கியத்துவத்தை அவர்தான் நன்றாகப் புரிந்துகொண்டார்.
மேலும், சினிமா மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்று பல நல்ல படிப்புகள் இருப்பதையும், பல்வேறு துறைகளையும் கலைகளையும் நாம் அதில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் யோசித்தார்.
அவர் என்னிடம், 'நீ முதலில் போய் அந்தப் படிப்பைப் படி. அப்போதுதான் உனக்கு எது பிடிக்கும், எது சரியாக வரும், அல்லது உண்மையில் இந்தத் துறை உனக்குச் செட் ஆகுமா என்பதைப் பற்றி உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்' என்று கூறினார். அந்த விஷயத்தில் அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்" எனக் கூறியிருக்கிறார்.