ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது.. இனி திருவிழாதான் போங்க
சென்னை: விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை கடந்து ஜூலை 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
விஜய்யின் கரியரில் ஜனநாயகன் திரைப்படம் எப்போதும் மறக்கப்படாது. இதுதான் அவரது கடைசி படம் என்ற அறிவிப்பும் வந்ததிலிருந்தே; இதன் மீது அவரது ரசிகர்கள் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய பிளான் போடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால்; திட்டமிட்டபடி அப்போது ரிலீஸ் செய்ய முடியவில்லை. கேவிஎன் நிறுவனம் கோர்ட்டுக்கெல்லாம் சென்று பார்த்தது. ம்ஹூம் எதுவும் சாதகமாக நடக்கவில்லை.
மறு தணிக்கையில் படம்: இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு தரப்பு; மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பி வைத்தது. அதிகாரிகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை; அப்போதும் பார்க்காமல் இழுத்தடித்துவந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் முழு திரைப்படமும் இணையத்தில் லீக்காகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒட்டுமொத்த இந்திய துறையும் இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தது. விஜய் மட்டும் அமைதியாகவே இருந்தார்.
அதிரடி கைது: முதலில் அந்த விஷயத்தில் எடிட்டர் மீதுதான் அனைவரது சந்தேகமும் இருந்தது. ஆனால் அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதேசமயம் இந்த சட்ட விரோத செயலை செய்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். பிறகு ஒருவழியாக படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.
ஜூலை 23ல் ரிலீஸ்: ஒருவழியாக படத்துக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரத்திருக்கின்றன. அதன்படி ஜூலை 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே படம் இணையத்தில் லீக்காகியிருந்தாலும்; விஜய்யின் கடைசி படம் என்பதால் அதன் மீதான மவுசு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. சில விஷயங்களை மாற்றி அமைத்திருப்பதாகவும் தயாரிப்பாளரும் கூறியிருக்கிறார்.
டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: படத்தின் டைட்டில் கார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் என்று இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான இரண்டாவது சிங்கிளிலேயேகூட அப்பாடித்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. சூழல் இப்படி இருக்க கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில்; இன்று தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.