காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன்மூலம் ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம்-ஒழுங்கையும், காவல்துறை பணியின்மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.