கேரளாவில் 8 கிலோ தங்கம் பறிமுதல்; 9 பேர் கைது
கொச்சி: இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பல்வேறு விமான நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், எட்டுக் கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ.11 கோடிக்குமேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சுங்கத்துறை ஆணையர் டி. தீஜு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் 14 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவ்வழக்குகளின் தொடர்பில் கேரளத்தைச் சேர்ந்த அறுவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் என மொத்தம் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வருவாய் புலனாய்வு இயக்ககமும் கேரளக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர்.
அனைத்துலகத் தங்கக் கடத்தல் கும்பல்கள் தங்கத்தைக் கடத்த அதிநவீன முறைகளைக் கையாண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. தங்கத்தைப் பசையாகவும் கூட்டுப் பொருள்களாகவும் மாற்றி, ஆடைகள், உடலின் உட்பகுதிகள் மற்றும் விமான இருக்கைகளில் மறைத்து வைத்துக் கடத்த முயல்வதாக ஆணையர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாகத் தங்கம் கடத்துவதைத் தடுத்து, நாட்டின் பொருளியலைப் பாதுகாப்பதில் சுங்கத்துறை உறுதியோடு செயல்படும் என்றும், கடத்தலின் பின்னணியில் உள்ள அமைப்புகளைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.