கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
புதுடில்லி: கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்துள்ளது.
இந் நிலையில், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டையும், திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டையும் வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.
தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் அளவை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். ஆற்றின் கரையோரங்களில் வசிப்போம் விழிப்பு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.