📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 06, 2026 12:34 PM

கேரளாவில் ஆகஸ்ட்டில் அழிவை ஏற்படுத்தும் கனமழை!

கேரளாவில் ஆகஸ்ட்டில் அழிவை ஏற்படுத்தும் கனமழை!

மூணாறு: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆகஸ்ட்டில் கடும் அழிவை ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது. மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியான துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது.

இம்மாநிலத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த கால அளவில் ஜூலையில் மழை வலுவடைவது வழக்கம். அதன்பிறகு படிப்படியாககுறைந்து விடும்.

ஆனால் சமீபகாலமாக ஆகஸ்ட்டில் மழை அதிகரித்து உயிர் பலி உட்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளை கணக்கிடும்போது 2018ல் ஆகஸ்ட்டில் கொட்டித்தீர்த்த மழை மாநிலத்தை புரட்டிப் போட்டது.

480 பேர் வரை பலியான நிலையில் கணக்கிடாத வகையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மூணாறில் நிலச்சரிவில் சிக்கி மண்ணிற்குள் புதைந்த அரசு கல்லுாரி கட்டடம் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக. 6ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 70 பேர் இறந்தனர். அந்த துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. இந்தாண்டு ஜூலை 31ல் வலுவடைந்த பருவ மழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் மண் சரிவு மற்றும் நீர்நிலைகளில் சிக்கி நேற்று வரை 25க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இடுக்கி மாவட்டத்தில் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இது போன்ற சம்பவங்களால் ஆகஸ்ட்டில் பெய்யும் மழை மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.