களத்தில் இறங்கிய சிங்கப்பெண் அதிரடிப் படை; ஆடவர் கைது
சென்னை: வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரைச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் கைது செய்து மகளிர் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
இதன்மூலம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சென்னையில் தனது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் புதன்கிழமை (ஜூன் 10) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற ஆடவர் மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணைத் தள்ளிவிட்டுத் தப்பி ஓடினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்வரியும், பெண் காவலர்களும் விரைந்து சென்று தப்பியோடிய சுரேஷைத் தேடிக் கண்டுபிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரம்பிக்கப்பட்டபின், பதியப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் பொது இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தப் படையைச் சேர்ந்த 70 குழுக்கள் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அக்குழுவினர் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
சிங்கப்பெண் அதிகாரிகள், பெண்கள்-குழந்தைகளுக்கான காவல்துறை அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள்.