கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
கொளத்தூர் தேர்தல் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
Published : September 2, 2026 at 11:10 PM IST
சென்னை: கொளத்தூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இரண்டாவது இடம் பிடித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்திடம் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி பேடுகளை மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் வி.எஸ்.பாபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.