கோவன் பகுதியில் வீட்டு தீ விபத்து: 30 பேர் வெளியேற்றம்
கோவன் ரோட்டில் உள்ள இரண்டு மாடி தனியார் வீடு ஒன்றில் சனிக்கிழமை (செப்டம்பர் 5) மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே அந்த வீட்டில் இருந்தவர் தன்னிச்சையாக அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
கோவன் பகுதியில் உள்ள சைமன் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து குறித்து அன்றைய தினம் மதியம் மூன்று மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
ஒரு வீட்டில் எரிந்த தீ பக்கத்தில் இருந்த மற்றொரு வீட்டையும் ஓரளவு பாதித்துவிட்டது. பாதுகாப்பு கருதி எஸ்சிடிஎஃப்பும் காவல்துறையும் அப்பகுதியில் இருந்த 30 பேரை மாற்று இடங்களுக்கு வெளியேற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை வந்தடைந்த குடிமைத் தற்காப்புப் படையினர் மூன்று நீர் குழாய்களைக் கொண்டு தீயைச் சுற்றிவளைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்து பிறகு முழுவதுமாக அதனை அணைத்தனர்.
தீ எரிந்த வீட்டிலிருந்து பெருமளவில் கறும்புகை வான் நோக்கி வெளியேறியதாகத் தெரிகிறது. கறும்புகையை சுவாசித்த அண்டை வீட்டார் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தீப்பிடிக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை எஸ்சிடிஎஃப் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்த விபத்திற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அவ்விடத்தை அடைந்தபோது தீப்பிடித்த வீட்டில் இருந்து கிளம்பிய வெண்புகை அப்பகுதியை சுழ்ந்திருந்தது காணப்பட்டது.