மேகதாது பிரச்னை: பிரதமருக்கு கடிதம் எழுதுவது தீர்வாகுமா பா.ஜ., விவசாய அணி கேள்வி
மேகதாது பிரச்னை: பிரதமருக்கு கடிதம் எழுதுவது தீர்வாகுமா பா.ஜ., விவசாய அணி கேள்வி
Google News Tamil Latestமதுரை: ''கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் பேசாமல், காவிரி மேகதாது பிரச்னை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியது தீர்வாகுமா,'' என, பா.ஜ. விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கேள்வியெழுப்பினார்.
அவர் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, எப்போது அமைத்தாலும் அருகிலிருக்கும் காங்., தலைவர் ராகுலை விட்டுவிட்டு, மேகதாது பிரச்னை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வெறும் கண்துடைப்பு. தி.மு.க.,வும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இதைத்தானே செய்தது.
தற்போதைய த.வெ.க., அரசுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. முதல்வர் விஜயுடன் ராகுல் நெருக்கமான நட்பு கொண்டுள்ளார். முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததும் ராகுல் வந்தார்.
உண்மையிலேயே மேகதாது அணை குறித்து விஜய்க்கு அக்கறை இருந்தால், ராகுலிடம் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ்காரர்களுடன் பேசி தீர்வு காணலாமே. இந்த விஷயத்தில் தி.மு.க.,வும் த.வெ.க.,வுக்கும் வித்தியாசமே இல்லை.
பிரதமருக்கு கடிதம் ஏன் டில்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் விஜய் சென்ற போது, ராகுலையும் சந்தித்து மேகதாது பிரச்னை குறித்து விஜய் விவாதித்திருக்கலாம். ராகுலை சந்திக்காமல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது தமிழகத்திற்கு சரியான தீர்வாகுமா.
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து பலனை அனுபவிக்கிறது. கூட்டணியை மாற்றி அமைச்சர் பதவி பெற்றதில், காங்கிரஸ் காட்டிய அக்கறையை தமிழ்நாட்டு வளர்ச்சியிலும் காட்டலாமே.
முல்லைப்பெரியாறு அணை குறித்த விஷயங்களிலும் தனது நிலைப்பாட்டை முதல்வர் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.