📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news June 20, 2026 01:00 PM

மீண்டும் வெடித்த மோதல்: ஸ்ரீசாந்தின் குத்துச்சண்டை சவால்... ஹர்பஜன் சிங் கொடுத்த மாஸ் பதில்

மீண்டும் வெடித்த மோதல்: ஸ்ரீசாந்தின் குத்துச்சண்டை சவால்... ஹர்பஜன் சிங் கொடுத்த மாஸ் பதில்

மீண்டும் வெடித்த மோதல்: ஸ்ரீசாந்தின் குத்துச்சண்டை சவால்... ஹர்பஜன் சிங் கொடுத்த மாஸ் பதில்

மும்பை: 2008 ஐபிஎல் தொடரின் போது தன்னை அறைந்த ஹர்பஜன் சிங்கை குத்துச்சண்டை போட்டிக்கு அழைத்த ஸ்ரீசாந்துக்கு தற்போது ஹர்பஜன் சிங் சமூக ஊடகத்தில் மறைமுகமாக ஒரு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சக வீரர்களும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுமான ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த 2008 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட மோதல் காரணமாக நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. அப்போது ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்தை அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல ஆண்டுகளாக எவ்வாறு பாதித்தது என்பது குறித்து ஸ்ரீசாந்த் ஏற்கனவே விவரித்துள்ளார். அதே நேரத்தில், ஸ்ரீசாந்தின் மகள் தன்னை எதிர்கொண்டபோது தனது இதயம் நொறுங்கியதாக ஹர்பஜன் சிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் இந்த கசப்பான சம்பவங்களை கடந்துவிட்டதாகத் தோன்றிய நிலையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இதுவரை வெளியிடப்படாத 'அறை' சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் இந்த சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலான ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.

குத்துச்சண்டை வளையத்திற்குள் வர ஸ்ரீசாந்த் சவால்

இந்நிலையில், ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியின் போது இருவருக்கும் இடையேயான புதிய மோதல் வெடுத்துள்ளது. அந்த நேர்காணலில் குத்துச்சண்டை கையுறைகளை அணிந்திருக்கும் இருவரின் பழைய புகைப்படம் ஒன்று காட்டப்பட்டதும், ஹர்பஜனுக்கு ஸ்ரீசாந்த் பகிரங்க சவால் விடுத்தார்.

"என்னுடன் குத்துச்சண்டை வளையத்திற்குள் (ring) வர உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இதே கையுறைகளை அணிந்து மோதிப் பார்ப்போம், வாருங்கள். இது உங்களுக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால்" என்று ஸ்ரீசாந்த் கூறினார். மேலும், "பஜ்ஜி, அறைந்த சம்பவத்திலும் என் மீதும் உங்களுக்கு அவ்வளவு பிரச்சனை இருந்தால், ரிங்கிற்குள் வாருங்கள். என் மனதார உங்களை அழைக்கிறேன்," என்றும் ஸ்ரீசாந்த் கூறினார்.

பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்

ஸ்ரீசாந்தின் இந்த சவால் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஸ்ரீசாந்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பதிவிட்ட நேரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஹர்பஜன் சிங், "யாரோ மிகச் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்... வீணாகப் பேசுபவர்களைப் பேச விடுங்கள், எப்போதும் வெற்றுப் பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

'வெற்றுப் பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும்' என்ற இந்த பழமொழி, ஸ்ரீசாந்தின் சவாலுக்கு ஹர்பஜன் அளித்த பதிலடிதான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.