மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி
சென்னை: மக்கள் மேடை என்ற பெயரில் தனி இயக்கம் ஒன்றை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா துவக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மக்கள் மேடை - இது மக்களின் இயக்கம்! நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம்! உங்களிடம் இருக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த ஒரு சிறந்த தளம். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்.
வாருங்கள்! ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்!
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: makkalmedaitn12@gmail.com
இவ்வாறு அந்த அறிக்கையில் லதா கூறியுள்ளார்.
இத்துடன் லதா வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: People's Movement. மக்கள் மேடை. எங்களுடன் சேர்ந்து சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற எங்கள் அமைப்புடன் சேர்ந்து தமிழகத்திற்காக வேலை செய்ய நினைப்பவர்கள் ஒன்றாக சேரலாம். ஒன்றாக சேர்ந்து தொடர்புகொண்டு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த மாநிலத்திற்கு பல நன்மைகள் செய்ய முன்வாருங்கள். ஒன்றாக சேர்வோம். ஆக்கப்பூர்வமான காரியங்களை சேர்வோம். மக்கள் மேடை என்ற இந்த அமைப்பில் யாரெல்லாம் சேரலாம் என நினைத்தால், சாமானிய மக்கள் யாராக இருந்தாலும் ரிசோர்ஸ், மக்கள் சக்தி,உங்கள் எண்ணம்,உங்களுக்கு பங்களிப்பு அளிக்க வேண்டிய மனம் இருக்கும் அனைவரும், மாநிலத்திற்கு ஒன்று சேர்கிறோம். எங்கள் பங்களிப்பை அளிக்கிறோம் என நினைப்பவர்கள் ஒன்று சேரலாம்.
மூத்த குடிமக்கள், ஐஏஎஸ்,ஐபிஎஸ், தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் என யாராக இருந்தாலும் உங்கள் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களை தொடர்பு கொண்டு தொகுதிக்காகவும், தமிழகத்திற்காகவும் வேலை செய்யலாம்.மாநிலத்திற்காக பணியாற்றக்கூடிய உள்ளூர் தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம். ஏராளமான வளம், கொள்கை,திட்டம், பங்களிப்பை மாநிலத்திற்கு அளிக்க மக்கள் விரும்புகின்றனர். எனவே, அத்தகைய மக்கள் ஒன்று சேர வேண்டும். நன்றி. வணக்கம். இவ்வாறு அந்த வீடியோவில் லதா கூறியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்த ரஜினி, கட்சி துவங்குவதாக அறிவித்தார். பிறகு அந்த முடிவில் இருந்து பின்வாங்கி விட்டார். இதனிடையே, அவரது மனைவி லதா இன்று தனி இயக்கம் ஒன்றை துவக்கி உள்ளார்.
பாஜவில் இருந்து விலகிய அண்ணாமலை, புது அமைப்பு துவங்கி, அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த அதே நாளில் லதாவும் புதிய இயக்கத்தை துவக்கி உள்ளார்.