📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 11, 2026 06:01 AM

மதத்தை உயர்த்த தமிழை தாழ்த்துவதா? அமைச்சர் மரிய வில்சனுக்கு பா.ஜ., கண்டனம்

மதத்தை உயர்த்த தமிழை தாழ்த்துவதா? அமைச்சர் மரிய வில்சனுக்கு பா.ஜ., கண்டனம்

சென்னை: 'மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக, தமிழ் மொழியை தாழ்த்தி பேசிய அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: சட்டசபையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் மொழியாற்றல் மீதான விவாதத்தின்போது, 'என் மதம், எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது' என நிறுத்தியிருந்தால், அது அவரின் தனிப்பட்ட அனுபவம்.

ஆனால், 'என் மதம், எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது' என, சட்டசபையில் அமைச்சர் கூறியது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

'அன்பு' என்ற வார்த்தைக்கு, பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ற ஒற்றை வரியில் துாக்கி சாப்பிட்ட மொழி தான், நம் தாய் மொழி தமிழ். பிறப்பால், நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, உணர்ச்சி மிகுதியில், தமிழ் மொழி மீது வைத்த, தவறான விமர்சனத்திற்கு, அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக, கல்வித் துறையில் நான் இருப்பதால், ஆங்கிலத்தில் தான் எனது தொடர்புகள் உள்ளன. சட்டசபையில், சில நாட்களாக, உருவ கேலி மற்றும் ஜாதி ரீதியாகவும், பெண்களை முன்வைத்தும் கேலி செய்கின்றனர். இப்போது மொழியை வைத்து கேலி செய்யும் அளவுக்கு வந்து விட்டனர். எனக்கு மொழி, அன்பு மொழி, அமைதி மொழி. இரக்கத்தின் மொழியை கிறிஸ்துவம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவு தான் தமிழ் படித்தாலும் பலருக்கும் இது தெரியாது. கிறிஸ்துவ மதத்தில் பிறந்த நான், இதையெல்லாம் பைபிளில் படித்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.