📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 29, 2026 11:04 PM

நேபாள வெள்ளத்தில் பணப்பெட்டி.. உள்ளே இருந்த 92 லட்சம் பணம்.. மற்றுமொரு திருட்டுச் சம்பவம்!

நேபாள வெள்ளத்தில் பணப்பெட்டி.. உள்ளே இருந்த 92 லட்சம் பணம்.. மற்றுமொரு திருட்டுச் சம்பவம்!

நேபாள வெள்ளத்தில் பணப்பெட்டி.. உள்ளே இருந்த 92 லட்சம் பணம்.. மற்றுமொரு திருட்டுச் சம்பவம்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பணப்பெட்டி ஒன்று ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த 92 லட்சம் நேபாள ரூபாய் பணத்தை பொதுமக்கள் எடுத்துத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணில் இருந்து தோண்டி எடுத்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் கும்பலை அந்நாட்டு காவல்துறை கைது செய்திருந்தது. இந்தச்சூழலில் தான், மற்றுமொரு திருட்டுச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றனர். மேலும், வீடுகள், வாகனங்கள் உட்பட பல்வேறு பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தச்சூழலில் தான், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பணப்பெட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நேபாளத்தின் தாதிங் (Dhading) மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றங்கரையில், மிதந்து கிடந்த ஒரு பெட்டகத்தை உள்ளூர் வாசிகள் பார்த்திருக்கின்றனர். உடனே அதன் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்தப் பெட்டியை உடைத்து திறந்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை எடுத்துக்கொண்ட சிலர், அதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணையைத் தொடங்கியதாகவும் விசாரணையின் அடிப்படையில், 29 பேரை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 92 லட்சம் நேபாள ரூபாய்க்கும் அதிகமாக அதாவது, இந்திய மதிப்பில் 57 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பணப்பெட்டி எப்படி ஆற்றங்கரைக்கு வந்தது? அந்தப் பணம் யாருடையது? பணத்தை எடுத்தவர்கள் உண்மையில் அதை கொள்ளையடிக்கும் நோக்கத்தில்தான் எடுத்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.