📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 12:31 AM

"நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்"

"நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்"

கோவை அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவி்ல் அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத்குமார், விக்னேஷ் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 20) நடைபெற்றது. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 பேரும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 144 பேரும் பட்டம் பெற்றனர். தனித்தனியாக மேற்கண்ட மருத்துவமனைகளில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார், மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் கே.விக்னேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், எம்.எல்.ஏக்கள் கனிமொழி சந்தோஷ், ஸ்ரீகிரிபிரசாத், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, டீன் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் எய்ம்ஸ் இடம் தேர்வு குறித்து ஆலோசனை செய்து உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் உள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவறைகள், தூய்மையான வளாகம் மற்றும் நோயாளிகள் காத்திருப்பு நேரம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் தரத்தில் மருத்துவ சேவை கொடுக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்களை இழந்து இருப்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயம். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தவெக நிலைப்பாடு. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களது நிலையான முடிவு. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். அதை ஆளுநர் உரையில் கொண்டு வந்து இருக்கிறோம். மாணவர்கள் நீட் தேர்வில் தவறான முடிவு எடுக்க கூடாது.

நீட் மறுதேர்வு காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இதற்காக தான் அரசு உதவி எண்கள் வெளியிட்டு இருக்கிறது. இதனை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மட்டும் வாழ்க்கை இல்லை. நடைபெற உள்ள நீட் தேர்வை சிறப்பாக எழுதுங்கள். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து விடாது. நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தவிர சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம். மருத்துவமனையில் கட்டிடங்கள் பல பராமரிக்காமல் இருக்கிறது. இதனை சரிசெய்ய பொதுப்பணித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.