📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 02, 2026 08:32 AM

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அம்பயர்களுக்கு நேர்ந்த பயங்கரம்.. நடுவழியில் கடத்தப்பட்ட கார்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அம்பயர்களுக்கு நேர்ந்த பயங்கரம்..  நடுவழியில் கடத்தப்பட்ட கார்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அம்பயர்களுக்கு நேர்ந்த பயங்கரம்.. நடுவழியில் கடத்தப்பட்ட கார்

கராச்சி: பாகிஸ்தானில் கிரிக்கெட் அம்பயர்கள் சென்ற வாகனம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குவெட்டாவிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற அம்பயர்களை வழிமறித்த ஆயுதம் ஏந்திய கும்பல், அவர்களது வாகனத்தை மிரட்டி கடத்திச் சென்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முதல்தர அம்பயரான அஸ்லம் பலோச், தனது சக அம்பயர்களான காலித் மஹ்மூத், ஹமீத் கான், முகமது ரஹீம் மற்றும் ஹிதாயத்துல்லா ஆகியோருடன் கராச்சியில் நடைபெறவிருந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்றார். பலோசிஸ்தான் நெடுஞ்சாலையில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது சோஹ்ராப் என்ற பகுதியில் காலை உணவுக்காக நிறுத்தினர்.

பயணத்தை மீண்டும் தொடர்ந்த சில நிமிடங்களில், சோஹ்ராப் மற்றும் குஜ்தார் இடையே உள்ள லகோரியன் என்ற இடத்தில் 2 பேர் ஆயுதங்களுடன் சாலையின் நடுவே நின்று காரை வழிமறித்தனர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அம்பயர்களின் அடையாள அட்டைகளையும் வாகன ஆவணங்களையும் பறித்தனர். அப்போது சுற்றுவட்டாரப் பகுதியில் மேலும் 12க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய நபர்கள் தங்களைச் சூழ்ந்திருப்பதை அம்பயர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதை அடுத்து, அம்பயர்களை காரை விட்டு இறங்குமாறு மிரட்டிய கொள்ளைக் கும்பல், காரை ஓட்டிச் சென்றது. எனினும், அம்பயர்களின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் பணத்தை அவர்கள் பறிக்காமல் திருப்பித் தந்தனர். காரை கடத்திச் சென்ற பின்னர், அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு காரை மீண்டும் ஒப்படைக்க 20 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கேட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தத் தொகையை 8 லட்சம் ரூபாயாகக் குறைத்துக் கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து சோஹ்ராப் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த அம்பயர்களை கராச்சிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அம்பயர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் மீண்டும் அதே ஆபத்தான சாலை வழியாகப் பயணம் செய்வதைத் தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் குவெட்டா திரும்புவதற்கு கிரிக்கெட் வாரியமே சொந்தச் செலவில் விமானப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை எடுத்துத் தந்துள்ளது.