📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 18, 2026 07:33 PM

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா ஹூசேன் காமேனி பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல்

ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று 7வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, ஈரானின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.