📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 15, 2026 12:34 AM

பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு: கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்,

ரூ.83 லட்சம்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் சண்முகவேலு. இவர் கடந்த மாதம் 30-ந் தேதி வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற இருந்தார். இதையொட்டி பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் அவர் பணியாற்றிய சங்கத்தின் கணக்குகள், மேலும் அவர் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்த நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கணக்குகள் ஆகியவற்றை சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து வேடசந்தூர் வட்டார கள அலுவலர், எரியோடு சரக மேற்பார்வையாளர், வடமதுரை கள மேலாளர் மற்றும் அதிகாரிகள் அந்த கணக்குகளை சரிபார்த்து ஆய்வு செய்தனர். அப்போது அவர் பணியாற்றிய 2 சங்கங்களிலும் கடந்த 2021-ம் ஆண்டு 55 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.83 லட்சத்து 13 ஆயிரத்து 342 வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து முறைகேடு தொடர்பான அறிக்கையை பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கனகராஜிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த துணை பதிவாளர், மேல்நடவடிக்கைக்காக திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார்.