பயிர்க்கடனை தள்ளுபடி செய்க: தட்டில் உணவுகளுடன் வந்து விவசாயிகள் மனு
பயிர்க்கடனை தள்ளுபடி செய்க: தட்டில் உணவுகளுடன் வந்து விவசாயிகள் மனு
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் பரிந்துரைக்குமாறு அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
Published : July 28, 2026 at 9:27 PM IST
அரியலூர்: பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக் கோரி தட்டில் உணவுகளுடன் வந்து விவசாயிகள் மனு அளித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக் கோரி தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அரியலூர் மாவட்டத்திலும் விவசாயிகள் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரியலூரை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த கூட்டுறவு சங்க செயலாளரிடம் நூதன முறையில் இன்று மனு அளித்தனர்.
தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது, தட்டுகளில் பல உணவு வகைகளை வைத்து கையில் ஏந்தியபடி அவர்கள் வந்தனர். பின்னர், அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் உணவு பரிமாற முயன்றனர். ஆனால், அதனை மறுத்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தாங்கள் வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; தா.பழூர் ஒன்றியத்தில் மும்முனை மின்சார தட்டுப்பாட்டால் கருகிய நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
பின்னர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.