ஸ்கோலாஸ் மாநாடு: செயற்கை நுண்ணறிவு விடுதலை அளிக்க வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது
ஸ்கோலாஸ் மாநாடு: செயற்கை நுண்ணறிவு விடுதலை அளிக்க வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
பதினோறாவது அனைத்துலக ஸ்கோலாஸ் அமைப்புகளின் மாநாட்டின் ஒரு பகுதியாக, "செயற்கை நுண்ணறிவும் மனித உணர்வும்" என்ற தலைப்பிலான உச்சிமாநாடு செப்டம்பர் 6, ஞாயிறன்று இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நிறைவடைந்துள்ளது.
இதில் 35 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
"செயற்கை நுண்ணறிவு விடுதலை அளிக்க வேண்டும், அடிமைப்படுத்தக் கூடாது" என்று பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத் செயலாளரான பேரருள்திரு இந்துனில் ஜனகரத்னே அவர்கள் தெரிவித்தார். இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவை விமர்சன ரீதியாகவும், பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவால் எழும் சவால்கள் குறித்து சிந்தித்ததுடன், தொழில்நுட்ப வளர்ச்சி மனித மாண்பு, சுதந்திரம், மனசாட்சி, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இக்கருத்துகள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் “மகத்தான மானுடம்” (Magnifica Humanitas) என்ற திருத்தூது மடலிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கல்வி, மனநலம், வேலைவாய்ப்பு, மக்களாட்சி, அமைதி மற்றும் உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் இந்த உச்சிமாநாடு ஆய்வு செய்தது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதிக ஞானம், உணர்ச்சி நுண்ணறிவு, பொறுப்புள்ள குடியுரிமை மற்றும் அறநெறி சார்ந்த தலைமைத்துவம் தேவை என்று பங்கேற்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தக் கூடுகை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியாவிற்கு மேற்கொண்ட பயணம் மற்றும் இஸ்திக்லால் மதங்களுக்கிடையேயான பிரகடனம் கையெழுத்திடப்பட்டதன் இரண்டாவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அடுத்த உலகளாவிய ஸ்கோலாஸ் அமைப்புகளின் மாநாடு 2027 செப்டம்பரில் பிரேசிலில் இடம்பெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.