தேசிய தின வார இறுதியில் 13 ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமீறலில் சிக்கினர்
தேசிய தின நீண்ட வார இறுதி விடுமுறை தினங்களில் (ஆகஸ்ட் 6 முதல் 10 வரை) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வரிசையை முந்திச் செல்வது, ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 13 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர்.
இத்தகவலை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தெரிவித்துள்ளது.
அவ்வகையில் 11 வாகனங்கள் ஒழுங்காக வரிசையில் சென்று சேருவதற்காக மீண்டும் திருப்பியனுப்பப்பட்டன (யூ டர்ன்); 2 வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் இரட்டை வெள்ளைக் கோடுகளைத் தாண்டி வரிசையை முந்திச் சென்றதற்காகச் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக வலதுபுறம் திரும்புதல், பிற வாகனங்களுக்கு இடையூறு அல்லது ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துதல் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மேல் நடவடிக்கைக்காக 10 ஓட்டுநர்கள் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் , அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் பிற ஓட்டுநர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.