📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 16, 2026 11:31 PM

தெற்காசியாவில் இளம் தலைமுறையினர் விளைவித்த ஆட்சி மாற்றம்

தெற்காசியாவில் இளம் தலைமுறையினர் விளைவித்த ஆட்சி மாற்றம்

தெற்காசிய ஆய்வுக் கழக (ISAS) அனைத்துலக மாநாட்டின் முதல் நாளில், ‘தெற்காசியாவில் ஜென் ஸி (Gen Z) தலைமுறை தலைமையிலான ஆட்சி மாற்றங்கள்’ என்ற தலைப்பில் அனைத்துலகக் கொள்கை ஆய்வு நிபுணர்கள் கருத்தரங்கு திங்கட்கிழமை (மார்ச் 23) நடைபெற்றது.

பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம் ஆகிய மூன்று நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் இந்தக் கருத்தரங்கில் ஆராயப்பட்டன. ஊழல், பொருளியல் ஏற்றத்தாழ்வு, வலுவற்ற ஜனநாயகக் கட்டமைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து இளையர்கள் கோரும் உண்மையான கட்டமைப்பு மாற்றங்கள் பற்றி மூன்று பேச்சாளர்கள் விவரித்தனர்.

ஓவியக்கலைவழி தகவல் பரிமாற்றம்

அமெரிக்காவின் கோல்கேட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் நவீன் முர்ஷித், தெற்காசியாவில் ‘ஸி’ தலைமுறை (Gen Z) இளையர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

குறிப்பாக, பங்ளாதேஷ் போராட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் அப்பால், இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் சாலைகளில் உள்ள சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களும் அவற்றில் எழுதப்பட்ட முழக்கங்களும் (Graffiti) எவ்வாறு மக்களின் தகவல் தொடர்புச் சாதனமாக மாறின என்பதையும் விளக்கினார்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதே தவறுகளைச் செய்யாமல் நாட்டை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பங்ளாதேஷின் உண்மையான சவால் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய இளையர்களுக்கு முறையான அரசியல் கல்வியின் தேவை இருப்பதையும் வலியுறுத்தினார்.

வாய்ப்புகள் இல்லாததால் விரக்தி

கருத்தரங்கில் பேசியவர்களுள் மற்றொருவரான இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் சுமதி சிவமோகன், இலங்கையின் அண்மைய மக்கள் எழுச்சி, வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை விவரித்தார்.

2022ல் நடைபெற்ற போராட்டத்தை முந்தைய இளையர் போராட்டங்களில் இருந்து வேறுபடுத்துவது அதன் சமூக, பொருளியல் காரணங்களே என அவர் குறிப்பிட்டார்.

“அந்த இளையர்கள் பெரும்பாலும் நகரங்கள், புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கைப்பேசிகளைப் பயன்படுத்தும் அவர்கள், சமூக வேர்களிலிருந்து சற்றே துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தனர்,” என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நேப்பாளத்தின் ஜனநாயக அளவீடு

“வி-டெம் (V-DEM) புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே ஜனநாயகத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன என்றால், ஏன் மாபெரும் இளையர் போராட்டங்கள் வெடித்தன?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், இந்த அளவீடுகள் உண்மை நிலையைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டன என்று வாதிட்டார்.

அரசியல் அறிவியல் துறை மேல்தட்டு அளவீடுகளைக் கைவிட்டு, அடிமட்ட ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், “பள்ளிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு எந்த அளவுக்குக் குறைகிறது என்பதே உண்மையான ஜனநாயகத்தின் வெற்றியாகும்,” என்று கூறினார்.