தெற்கு மண்டல அணி கேப்டனாக திலக் வர்மா நியமனம்.. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு வாய்ப்பு
தெற்கு மண்டல அணி கேப்டனாக திலக் வர்மா நியமனம்.. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு வாய்ப்பு
மும்பை: துலீப் டிராபி 2026-27 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான தெற்கு மண்டல அணியை வழிநடத்தும் பொறுப்பு இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்டர் திலக் வர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய தெற்கு மண்டல அணியை நிர்வாகம் அறிவித்தது.
சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியில் திலக் வர்மா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், தெற்கு மண்டல அணி இம்முறை நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அரையிறுதிப் போட்டி ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
ஆந்திர அணியின் முன்னணி வீரர் ரிக்கி புய் துணை கேப்டமுனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் இந்திய அணியின் முன்னாள் பேட்டர் கருண் நாயர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால், தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரர் நாராயண் ஜெகதீசன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் ரவிச்சந்திரன் ஸ்மரன் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மண்டல அணி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், செப்டம்பர் 6 முதல் 10 வரை பெங்களூரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் விளையாடும்.திலக் வர்மா (கேப்டன்), ரிக்கி புய் (துணை கேப்டன்), கருண் நாயர், டி. தியாகராஜன், ஸ்ரேயாஸ் கோபால், கே. சாய் தேஜா, டி. விஜய், வி. காவேரப்பா, அமன் கான், அபினவ் தேஜ்ரானா, எஸ்.கே. ரஷீத், கே. ஹிமதேஜா, ஆர். ஸ்மரன், என். ஜெகதீசன்.
கடந்த ஆண்டின் துலீப் டிராபி தொடரிலும் தெற்கு மண்டல அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. அப்போது வடக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தபோதிலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தெற்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், மத்திய மண்டல அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட தெற்கு மண்டல அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு சுருண்டது. அதனைத் தொடர்ந்து விளையாடிய மத்திய மண்டல அணி, தனது முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து இமாலய முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் தெற்கு மண்டல அணி தீரத்துடன் போராடி 121 ஓவர்களில் 426 ரன்கள் குவித்தது. இருப்பினும், இறுதி இன்னிங்ஸில் மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை மத்திய மண்டல அணி 21 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.