📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 03, 2026 06:02 PM

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?'

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?'

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

கறார் முடிவுகளை எடுத்துவரும் திமுக கட்சித் தலைமை, செந்தில் பாலாஜிக்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்களாம் பல முக்கிய சீனியர்கள்.!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில் பாலாஜி'க்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்கள் சீனியர்கள் பலர்.

அமைப்புரீதியாக மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியை 110 மாவட்டங்களாகப் பிரித்ததோடு, நிர்வாகப் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பையும் விதித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். உட்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகளைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.

'மறுசீரமைப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை' என ஒருசில சீனியர்கள் முகம்சுழிக்க 'கட்சிக்காக நீங்க இத ஏத்துக்கணும்' என கறார் காட்டியிருக்கிறார். அதுவே செந்தில் பாலாஜியிடம் மட்டும் தி.மு.க தலைமை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளை அவர் நிர்வகித்துவந்த நிலையில் தற்போது மறுசீரமைப்புக்கு பிறகு கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி கோவையில் எம்.எல்.ஏ ஆகியிருப்பதால் மறுசீரமைப்புக்கு பின் அவர் எந்த மாவட்டத்தில் மா.செ-வாக தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 'உங்களுக்கு கரூர் வேண்டும் என்றால் கரூரை எடுத்துக் கொள்ளுங்கள், கோவை வேண்டும் என்றால் அதனை தேர்வு செய்யுங்கள்' என ஆப்ஷன் கொடுத்திருக்கிறது தலைமை.

ஒருவருக்கு எந்த ஊரில் வாக்கு செலுத்தும் உரிமை இருக்கிறதோ அந்த பகுதியில்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு மட்டும் விரும்பிய மாவட்டத்தை தேர்வு செய்ய ஆஃபர் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் இது குறித்து விசாரித்த போது, "கோவை மாவட்டத்தில் தி.மு.க வீக்காக இருப்பதால் அங்கே கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தலைமை கோவைக்கு சென்றலும் சரிதான் எனச் சொல்கிறது. அதேநேரம், கரூர் இடைத்தேர்தல் வரயிருப்பதால் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது. முடிவு செய்ய வேண்டியது அண்ணன் செந்தில் பாலாஜிதான்" என்றனர்.