திமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
திமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
நிதிநிலை அறிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகளை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தினார்.
Published : July 28, 2026 at 10:22 PM IST
சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காணொளி வாயிலாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
குறிப்பாக, சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும். பேரவையில் விவாதத்தின் போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் சட்டம் ஒழுங்கு, எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம், லாக்கப் டெத், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பு திமுக திட்டமிட்டுள்ள நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து யார் யாரெல்லாம் சட்டப்பேரவையில் பேசுவது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சட்டமன்றத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானோர் சீனியர்களாக இருப்பதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை முறையாக வழிநடத்த உதவுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.