திருமணம் நின்றதால் என்னை யாரும் பாவமாக பார்க்க வேண்டாம்.. ஸ்மிருதி மந்தனா உருக்கம்
திருமணம் நின்றதால் என்னை யாரும் பாவமாக பார்க்க வேண்டாம்.. ஸ்மிருதி மந்தனா உருக்கம்
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தமக்குக் கிடைக்கும் அனுதாபங்களை வெறுப்பதாக தெரிவித்துள்ளார். திருமணம் நின்றதால், தம்மை கண்டு யாரும் பரிதாபப்படுவதையோ அல்லது 'பாவம்' என்று நினைப்பதையோ தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல போட்காஸ்டர் ராஜ் ஷமானி உடனான நேர்காணலில், சோகமான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது குறித்து ஸ்மிருதி மந்தனா விரிவாகப் பேசினார். உணர்ச்சிகள் மேலோங்கும்போது சில நேரங்களில் குளியலறைக்குச் சென்று அழுவதுண்டு என்றும், ஆனால் பிறரிடம் இருந்து அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
இது குறித்து பேசிய அவர், "நான் சோகமாக இருக்கும்போது நீண்ட நேரம் அமைதியாகி விடுவேன். எனக்குள் ஒடுங்கிப் போய்விடுவேன். அழுது வடிய எனக்குப் பிடிக்காது. எல்லாவற்றையும் விட எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உள்ளது என்றால், அது அனுதாபம் தான். எந்த வகையான அனுதாபத்தையும் நான் வெறுக்கிறேன்.
'ஐயோ சோகமாக இருக்கிறாயா, என்ன நடந்தது?' என மக்கள் வந்து கேட்பதை என்னால் தாங்க முடியாது. நாம் ஏதோ ஒரு போட்டியில் ஆட்டமிழந்து சோகமாக இருந்தால், நாம் ஏதோ பெரிய இழப்பைச் சந்தித்துவிட்டது போல் மக்கள் ஓடி வந்து ஆறுதல் கூறுவார்கள். எனது வாழ்க்கையின் முக்கிய விதியே யாரிடமிருந்தும் எவ்வித அனுதாபத்தையும் பெறாமல் இருப்பதுதான். என்னை யாரும் 'பாவம்' என்று பார்க்க வேண்டாம். நான் நலமாகவும், மனவலிமையோடும் இருக்கிறேன்," என்று மந்தனா கூறினார்.
"நான் எனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்துள்ளேன். இந்த அனுதாப வலைக்குள் நான் சிக்க விரும்பவில்லை. அதனால்தான் நேர்காணல்களில் எனது குடும்பச் சிக்கல்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறேன். மக்கள் என்னை எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மனிதராகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது தனிப்பட்ட சோகக் கதையைக் கேட்டு மக்கள் ஈர்க்கப்படுவதை விட, எனது ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடினமான தருணங்கள் மற்றும் கடந்த கால அனுபவங்களை மனதில் தேக்கி வைக்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதிலேயே தமக்கு நம்பிக்கை அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 30 வயதான ஸ்மிருதி மந்தனா, தற்போது உலகின் முன்னணி பேட்டராகத் திகழ்கிறார். 2025 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அவர், தற்போது டி20 தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.