📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 15, 2026 10:34 PM

திருவள்ளூர்: இட்லி மாவு வாங்குவது போல் நடித்து பெண் கொடூர கொலை: குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

திருவள்ளூர்: இட்லி மாவு வாங்குவது போல் நடித்து பெண் கொடூர கொலை: குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

திருவள்ளூரில் பெண்ணை கொலை செய்தது ஏன்? என குற்றவாளி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள பாபநாரிஷி கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55). இவர் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் மளிகைக்கடைக்கு சென்று விட்டார். வீட்டில் வனஜா மட்டும் தனியாக இருந்தார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த ராதாகிருஷ்ணன், வீடு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வனஜா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து, திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை மற்றும் கொள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வனஜா வீட்டிற்கு வந்து இட்லி மாவு கேட்டுள்ளார். அப்போது, திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வனஜாவின் கழுத்தில் குத்தினார்.

நகைகள் பறிப்பு

இதில் பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த அவருடைய கழுத்தில் இருந்த தாலி, தாலிச்சரடு, தங்க வளையல்கள் உள்ளிட்ட மொத்தம் 12.5 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டார். பின்னர் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பவம் நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதைத்தொடர்ந்து பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி வாக்குமூலம்

போலீஸ் விசாரணையில், அவர் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியை சேர்ந்த யுகேந்தர் என்ற அப்துல் ரகுமான் என்பதும், வனஜாவை திட்டமிட்டு அவர் கொலை செய்ததும் உறுதியானது. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். காதலித்து திருமணம் செய்து கொண்ட நான், பழவேற்காட்டில் கடந்த 6 ஆண்டுகளாக 7 மாத கர்ப்பிணி மனைவியுடன் வசித்து வருகிறேன்.

அப்பகுதியில் புது வீடு கட்டி வரும் நிலையில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், வனஜா வீட்டை நோட்டமிட்டு அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு திட்டமிட்டு அவரை கொலை செய்து நகையை திருடிவிட்டு தப்பி சென்றேன் என போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்துல் ரகுமான் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.