தலைமை நீதிபதி அவமதிப்பு: முதல்வர் மன்னிப்பு கேட்கணும்: திமுக எம்பி பி.வில்சன் வலியுறுத்தல்
தலைமை நீதிபதி அவமதிப்பு: முதல்வர் மன்னிப்பு கேட்கணும்: திமுக எம்பி பி.வில்சன் வலியுறுத்தல்
சென்னை: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில், தலைமை நீதிபதி, பக்தர்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்தது தொடர்பாக முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக எம்பி பி.வில்சன் கூறியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கின் போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், இத்தகைய ஆணவத்திற்கு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை. தலைமை நீதிபதி அரசாங்கத்தின் ஒரு அங்கமான நீதித்துறையின் தலைவர். நெறிமுறைப்படி அவர் ஆளுநர், முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்தபடியாக வைக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் போது, தலைமை நீதிபதி மட்டும் ஏன் அவமதிக்கப்பட்டார்?
அனைத்திற்கும் மேலாக, அன்னை மீனாட்சியின் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலமாகவும், புனித தீர்த்தத்தைப் பெற அனுமதிக்கப்படாததன் மூலமாகவும் பக்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், இவற்றுக்காக தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.