📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 11, 2026 02:00 PM

தமிழ் vs மதம் சர்ச்சை... நிதியமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் vs மதம் சர்ச்சை... நிதியமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் vs மதம் சர்ச்சை... நிதியமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் பேச்சு தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இடம்பெற்ற சில தமிழ் சொற்களை அமைச்சர் சரியாக உச்சரிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் பரவிய நிலையில், சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் விவாதத்தின்போது மதிமுக உறுப்பினர் ராஜேந்திரன் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், தனது மத நம்பிக்கையை முன்வைத்து பேசினார். அப்போது, எனது கிறிஸ்துவ மதம் எனக்கு ஒரு உயரிய மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பின் மொழி, இரக்கத்தின் மொழி, அமைதியின் மொழி, இத்தகைய சிறப்பான மொழியை எவ்வளவு தமிழ் படித்திருந்தாலும் இங்குள்ள பாதி பேருக்கு நிச்சயம் புரியாது. நான் பிறப்பால் ஒரு கிறிஸ்துவன், புனித பைபிளை ஆழமாக படித்து உணர்ந்திருக்கிறேன்” என்று அமைச்சர் கூறினார். கிறிஸ்தவ மதம் தனக்கு அன்பு, இரக்கம், அமைதி உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன், தனது மதத்தின் போதனைகளை தமிழ் படித்த அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது என்ற பொருளில் அமைச்சர் மரிய வில்சன் கருத்து தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ் மொழி தொடர்பான விமர்சனத்திற்கு பதிலளிக்கும்போது மதத்தை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேநேரத்தில், அமைச்சர் தனது தனிப்பட்ட மத நம்பிக்கையை வெளிப்படுத்திய விதம் குறித்தும் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன.

இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது மதத்தை பெருமைப்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், அதற்காக தமிழ் மொழியை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்து தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

https://x.com/NainarBJP/status/2086827010085757302?s=20

மேலும், தமிழின் சிறப்பை எடுத்துரைத்த நயினார் நாகேந்திரன், தமிழ் மொழி மீது அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் பட்ஜெட் விவாதத்தைத் தாண்டி, தமிழ் மொழி மற்றும் மத நம்பிக்கை குறித்த அமைச்சரின் கருத்து தற்போது சட்டப்பேரவைக்கு வெளியிலும் அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது.