'தமிழில் பெயர் பலகைகள் இல்லை தமிழ் வளர்ச்சித்துறை அமைதி ஏன்?'
கோவை: தமிழ் பாடம் கற்பித்தல், வெண்பா இயற்றுதல் பயிலரங்கம் மற்றும் மத்திய மாநில அரசுகள் விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா, பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அரங்கத்தில் நடந்தது.
விழாவுக்கு வளர் தமிழ் இயக்க பொதுச்செயலாளர் அப்பாவு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:
சீனாவில் சீன மொழியில்தான் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். சீன மொழியில்தான் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவிலும் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் பெயர் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.
பெயர் பலகைகள் மூன்று மடங்கு பெரிய அளவில் தமிழிலும், சிறிய எழுத்துக்களில் பிறமொழியிலும் வைக்க வேண்டும் என, சட்டம் இருக்கிறது. இதை நடைமுறை படுத்த வேண்டிய தமிழ் வளர்ச்சித்துறை அமைதியாக இருப்பது ஏன்?
இவ்வாறு, அவர் பேசினார்.
புலவர் பொன்முடி சுப்பையன், கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சி சுந்தரம், சின்னத்தம்பி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.