தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்கள் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி:தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கன அடி நீர் தண்ணீர் காவிரியில் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி நீர் விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகம் கூறும் நிலையில், கர்நாடகா மறுத்து வருகிறது. சமீபத்தில் டில்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும். இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சிவக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு மழை பெய்யாத காரணத்தினால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம் என அம்மாநில அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் நடந்த ஆலோசனைக்கு பிறகு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திறகு தினமும் வினாடிக்கு 3,500 கன அடிநீர் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, டில்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சிவக்குமார், இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளோம். வரும் ஞாயிற்றுக்கிழமை , காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தமிழக முதல்வர் கர்நாடகா வருகிறார். காவிரி தண்ணீர் நதி பிரச்னை குறித்து விவாதித்து இரு மாநில நலனுக்கு ஏற்ப தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.