தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசு தான் காரணம்
தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசு தான் காரணம் - மேயர் பிரியா
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதை மேயர் பிரியா சுட்டிக்காட்டி பேசினார்.
Published : July 29, 2026 at 3:50 PM IST
சென்னை: தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசு தான் காரணம் என சென்னை மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா பேசினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. மாமன்ற கூட்டத்தின் துவக்கத்தில் மேயர் பிரியா துவக்க உரையை பேசினார்.
அப்போது பேசிய அவர், "திமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கும், கூட்டணியில் இருந்து போனவர்களின் முயற்சி பலிக்காது. திமுக எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பிண்ணி பிணைந்துள்ளது. "சங்கு சுட்டாலும் மேன்மை தரும்" அது போல திமுக தன்னுடைய கொள்கைகளில் இருந்து சமரசம் செய்து கொள்ளாமல் என்றென்றும் மக்கள் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அஞ்சாமல் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டில் அதிகாரத்தை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள், பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டுள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உட்கட்டமைப்பு, வணிகச் சூழல், வளம், நிதிநிலை மேலாண்மை, சுற்றுச்சூழல் என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்துள்ளது. முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. முதலீட்டுக்கு உகந்த வணிக சூழல், மின் வசதியும் இருந்ததாக கூறப்பட்டது.
தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசுதான் காரணம் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவரது சீரிய முயற்சியில் விளையாட்டு துறை எண்ணற்ற பல சாதனைகளை படைத்தது.
தமிழ்நாடு அரசு "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை அறிவித்துள்ளது. 2006 முதல் 2011 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகு தமிழ் பெயர் சூட்டினால் மாநகராட்சி சார்பில் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தன் கரங்களால் அழகு தமிழ் பெயர் சூட்டிய குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்" என பேசினார்.
மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் கடந்த மாதம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இம்மாதம் 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. வழக்கமாக குறைந்தபட்சம் 80 முதல் 160 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மேயர் பிரியா பொறுப்பேற்ற பின் முதல்முறையாக குறைந்த அளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எவ்விதி திட்ட பணிகள் தொடங்கவில்லை மற்றும் சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளதால் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.