📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 11:00 PM

"தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!"

"தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!"

"தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!" - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான அரசாணையைத் தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது.

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து', 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை 9-ஆம் தேதியிட்ட கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்தே அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்' முதலில் பாடப்படுவது மரபாகவும் அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆகவே, 'தமிழ்த்தாய் வாழ்த்து' தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.