தொகுதி மறு வரையறை விவகாரம்: திமுக
சென்னை: 'லோக்சபா தொகுதி மறு வரையறை விவகாரத்தில், தமிழகத்தில் மட்டும் வேண்டாம் என்ற நாடகம் ஏன்' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி எழுப்பிய கேள்விக்கு, 'தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதால் எதிர்க்கிறோம்' என, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
தயாநிதி: லோக்சபா தொகுதி மறு வரையறையை ஆதரித்த தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியை கேள்வி கேட்க காங்., துணியுமா? தொகுதி மறு வரையறை நடந்தால், தெலுங்கானா மாநிலத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என, ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது ஏன்?
தமிழகத்தில் த,வெ.க., அரசை துாண்டி விட்டு, தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக எம்.பி.,க்கள் கூட்டம் என நாடகம் அரங்கேற்றிய காங்.,கின் உண்மையான நிலைப்பாடு என்ன?
நியாயமான தொகுதி மறு வரையறை என்ற நிலைப்பாட்டில் இருந்து, தொகுதி மறு வரையறை வேண்டாம் என, 'பல்டி' அடித்திருப்பது, தமிழகத்தில் மட்டும் தானா; அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா? காங்., ஆளும் மாநிலங்களில் இப்படியான எம்.பி.,க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை.
மாணிக்கம் தாகூர்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்வைத்தது, பா.ஜ.,வின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு வரையறையை அல்ல.
குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்கள், தங்கள் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதற்காக, மாநில பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை தான்.
ஒட்டுமொத்த தென் மாநிலங்களையும் வஞ்சித்து, வட மாநிலங்களுக்கு சாதகமாக பா.ஜ., கொண்டு வரத் துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைபட்ச தொகுதி மறு வரையறையை தான், தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என, காங்., எதிர்க்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.