📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 27, 2026 02:33 AM

“தட்டிவிடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்”

“தட்டிவிடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்”

சென்னை: ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது “‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதை விட தகுதியான பல படங்கள் நிறைய இருக்கிறது.

அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான் மதிக்கிறேன். ‘அது ஒரு கனாக்காலம்’ படத்துக்காக எனக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று சொன்னார்கள். நானும் நம்பினேன். ஆனால் அதற்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு ‘புதுப்பேட்டை’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை.

அதன் பிறகு ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘வடசென்னை’ ஆகிய படங்களுக்கும் சொன்னார்கள். இப்போது கேள்வி கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை. சில விஷயங்கள் முயன்றாலும் கிடைக்காது. அது தானாக அமையும். அந்த படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் அந்த படங்களில் எங்களுடைய உழைப்பு உண்மையான உழைப்பு. ஒரு தமிழனாக எனக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. எனவே தட்டிவிடாமல் தட்டிக் கொடுங்கள்” இவ்வாறு தனுஷ் பேசினார்.

முன்னதாக தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் வெளியானபோது கடும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் அந்த படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.