துண்டு ஒரு தடவ தான் தவறும்.. ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா.. மீண்டும் No
துண்டு ஒரு தடவ தான் தவறும்.. ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா.. மீண்டும் No-1 அணியானது
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் இன்னிங்ஸிற்கு வலுசேர்த்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கடினமான ஆடுகளத்திலும் நிலைத்து நின்று விளையாடி 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானம் காட்டிய அவர், முதல் 10 பந்துகளில் 11 ரன்களும், அடுத்த 10 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தார்.
தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய அவர், 31 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 அரைசதத்தைக் கடந்தார்.193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், ரியான் பர்ல் 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து போராடினார். வெஸ்லி மாதேவெரே மயங்க் யாதவ் பந்துவீச்சில் திலக் வர்மாவிடமும், பிராட் எவன்ஸ் ரிங்கு சிங்கிடமும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தனது 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், அசோக் சர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 3க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று சாதித்துள்ளது. இந்த தொடரின் சிறப்பான வெற்றியின் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, சர்வதேச டி20 தரவரிசையில் தனது முதலிடத்தையும், உலக சாம்பியன் அந்தஸ்தையும் மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.